தமிழகம் முழுவதும் மாநகர, மாவட்ட காவல்துறையின் சார்பில் சமூக ஊடக குழு தொடங்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
Youtube, Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் உண்டாக்கி காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கவனிக்க காவல்துறை சார்பில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதை பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 23 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கணினி சார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இயங்கும். பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் இக்குழு துரிதமாக செயல்படும். குறிப்பாக இந்த குழு மேற்கொள்ளும் நடவடிக்கையின் மூலம் சாதி, மத அரசியல் மோதல்களை தடுக்க உதவும் என காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.