மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணையுங்கள். இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது. 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் இருந்து மின் அலுவலகங்களில் நேரடியாக இணைக்கும் பணி நடந்தது. இந்த பணி இன்றுடன் (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. இந்நிலையில், மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலைக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.