தலித் மக்களின் மீதான வன்முறை சம்பவங்களைப் பற்றிய விவாதத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ‘உங்களில் ஒருவன்’ என்ற நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதில், மத்திய பாஜக அரசு, அதிமுக பொதுச்செயலாளர், திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தான், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதிய ரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்வீரா? மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களே!!
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்பி அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!” என பதிவிட்டுள்ளார்.