தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி கர்நாடகா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தியது.
இதனால் தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து பல அமைப்பினர் கோரிக்கை வைத்து பந்த் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று பெங்களூருவில் பந்த் தொடங்கி உள்ளது. கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி தலைமையில் பெங்களூர் பந்த் நடப்பதாக கரும்பு விவசாயிகள் அமைப்பின் தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு 100-க்கும் அதிகமான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இ
இதற்கிடையே தான் வரும் 29ஆம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்படும் என கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதனால் பல அமைப்புகள் இன்றைய பெங்களூரு பந்த்துக்கு வழங்கிய ஆதரவை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் இன்று எந்தெந்த சேவைகள் இருக்கும்? எந்தெந்த சேவைகள் இருக்காது? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இன்று பெங்களூருல் அனைத்து அவசரகால சேவைகள் வழக்கத்தில் இருக்கும். அதன்படி மருத்துவமனைகள், மருந்து கடைகள் (மெடிக்கல்), நர்சிங் ஹோம் இயங்கும். அரசு அலுவலகங்கள், மெட்ரோ சேவைகள் இருக்கும். பிஎம்டிசி பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலில் பெங்களூர் பந்த்துக்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து இருந்தது. தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் செயல்படும்.
மாறாக 29ஆம் தேதியில் ஓட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓலா, உபர் டிரைவர் சங்கம், ஆட்டோ சங்கத்தினரும் பெங்களூர் பந்த்துக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இவர்களும் இன்றைய பெங்களூர் பந்த்துக்கு பதில் வரும் 29ஆம் தேதி நடக்கும் கர்நாடகா பந்த்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், சாலையோர வியாபாரிகள், தியேட்டர்கள், மால்கள், மல்டி பிளக்ஸ்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பந்த் போராட்டத்தால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா மாநில டிராவல் ஆபரேட்டர் அசோசியேஷன் இந்த பெங்களூர் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் டிராவல் ஆபரேட்டர் அசோசியேஷன் வாகனங்கள் இன்று இயங்காது.