பாதிப்படைந்து வடுக்களாக மாறும் மனிதர்களின் இதய செல்களை, சருமத்தில் உள்ள செல்களை கொண்டு சீரமைக்கலாம் என்பதை கௌஹாத்தி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய காலக்கட்டத்தில் 30 வயது இளைஞர்களும் இதய சார்ந்த பல்வேறு நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, இதயத்தின் ஒரு பகுதி பாதிக்கப்படும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். ஆனால், விலங்குகளில் பழுதடைந்த இதய செல்கள் மீண்டும் வளர்ச்சி அடைகின்றன. ஆனால், மனிதர்களுக்கு இதய செல்கள் பாதிப்பு அடையும்போது, புதிய செல்கள் உருவாகுவதற்குப் பதிலாக பழுதடைந்த செல்கள் வடுக்களாக மாறி விடுகின்றன. இதய நோய்க்கு இதய மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மட்டுமே. அதிலும், உறுப்பு மாற்று சிகிச்சைக்கு போதுமான அளவில் இதயம் கிடைப்பதில்லை. அது மட்டுமல்லாமல் வேறொரு நபரின் இதயத்தை எடுத்து ஒருவருக்குப் பொருத்தும்போது, அந்த வெளி உறுப்பை அவரது உடல் ஏற்றுக் கொள்ள நீண்ட காலம் பிடிக்கிறது. இந்தநிலையில், மனித உடல்களில் உள்ள பொதுவான செல்களை இதய செல்களாக மாற்றுவது தொடர்பாக உலக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வேறொரு ஆதாரங்களின் மூலமாக நமக்கு கிடைக்கப் பெற்ற செல்லூலார் ரீப்ரோகிராமிங் புரதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறிப்பிட்ட சில புரதங்கள், செல்களின் மரபுகளில் வினை புரிந்து, அவற்றை புதிய செல்களாக உருவாக்குவது தெரியவந்தது. அதன்படி, மனிதர்களின் சரும செல்களை எடுத்து இதய செல்களாக மாற்றும் உத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கௌஹாத்தி ஐஐடி தொழில்நுட்பக் கழகத்தில், உயிரி அறிவியல் மற்றும் உயிரி பொறியியல் துறையின் உதவி பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர் ராஜ்குமார் பி தும்மர், அவரது ஆராய்ச்சி உதவியாளர் கிருஷ்ண குமார் ஹரிதாஸ்பளவன் ஆகியோர் இணைந்து இதய நலனை மேம்படுத்துவதற்கான புதிய தீர்வுகளை கண்டறிந்துள்ளனர்.
ஒரு நபரின் ஆரோக்கியமான சரும செல்கள் அல்லது வேறு ஏதேனும் சொமேடிக் செல்களை எடுத்து, அவற்றை இதய செல்களாக மாற்றம் செய்யத் தகுந்த 6 விதமான சிறப்பு புரதங்களை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள இதய செல்களானது, ஒரிஜினல் இதய செல்களைப் போலவே செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.