பாஜக தலைமையிலான மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் “95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன. கைதுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள் மற்றும் கைதுக்கு பிந்தைய வழிகாட்டுதல்களை நாங்கள் கேட்கிறோம்.. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வதற்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது..
2014-க்குப் பிறகு, மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்க்கட்சியினர் மீது அதிகமான எண்ணிக்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் பாஜகவில் இணைந்தவுடன் அந்த தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன..” என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தி.மு.க., ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத கட்சி உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஒப்புக்கொண்டது.. வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.