இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை ஈர்த்து, இன்ஸ்டாகிராம், டிக்டாக் செயலிகளை பின்னுக்கு தள்ளி ChatGPT செயலி சாதனை படைத்துள்ளது.
உலகளவில் கிட்டத்தட்ட 40% அதிகமானோர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் செயலிகளை விரும்புவதாக கூகுள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உலகின் பெரும் ஷாட் வீடியோ தளமாக வலம் வரும் TikTok, கடந்த சில ஆண்டுகளாக பெரு நிறுவனங்களுக்கு புதிய பாதையில் போகத் தூண்டியுள்ளது. ஆம், அந்த வகையில் டிக்டாக்கிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்ட அம்சம் தான் இன்ஸ்டா ரீல்ஸ், ஸ்னாப்சாட் ஸ்பாட்லைட் என வளர்ந்து நிற்கிறது.
உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஷாட் வீடியோ செயலியாக டிக்டாக் இருக்கிறது என கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில், பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சிமிலர்வெப் எனும் நுண்ணறிவு தளத்தின் அறிக்கையின்படி, சாட்ஜிபிடி, ஜனவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 1.3 கோடி பயனர்களைப் பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட செயலிகள், 10 கோடி பயனர்களைப் பெற இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொண்ட நிலையில், சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களைப் பெற்றுள்ளது. இதேபோல் கடந்த வாரத்தில் chat.openai.com என்ற இணையதளம், தினசரி 2.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.