4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தின் படி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கேற்ப 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடக்கவிருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.