2024-25 நிதியாண்டிற்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த இடைக்கால பட்ஜெட்டில், கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. ஆனால், நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாக இருக்கிறது.
அதேநேரம், தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவரும் வகையில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், எரிபொருட்களின் விலையை குறைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. நடுத்தர மக்களுக்கு நன்மை பயக்கும் சில அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2-வது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். முன்னதாக, இந்திய வரலாற்றில் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நபராக இருந்தார். தற்போது அதை சமன் செய்யவுள்ளார்.