மதுரை மாவட்டம் திருப்பாலை அய்யர் பங்களா பகுதியில் சுப்புராஜ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 11 வயதில் மகன் மற்றும் 9 வயதில் மகள் இருந்தனர். ஜெயலட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவர் தனது குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயலட்சுமி சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி. மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெயலட்சுமி இருசக்கர வாகனத்தில் சமயநல்லூர் அருகே தேனூர் ரயில்வே தண்டவாள பகுதிக்குச் சென்றுள்ளார்.
பின்னர் தனது மகன் காளிமுத்து ராஜா (11), மகள் பவித்ரா (9) ஆகியோருடன் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மன அழுத்தத்தில் மருத்துவ விடுப்பு கேட்டிருந்த நிலையில், உடனே பணிக்கு வர கட்டாயப்படுத்தியதால் காவலர் ஜெயலட்சுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.