அதிமுகவில் இருந்து பிரிந்துச் சென்ற இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் விரைவில் ஒன்று சேருவோம். ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் வரை அனைவரும் ஒன்று சேருவோம். ஒன்றிணைய எடப்பாடி ஒத்துழைக்கவில்லை என்றால், அவர் தனித்து விடப்படுவார். அது கூடிய விரைவில் நடக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தேர்தலை சந்திக்கும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருப்பார். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் ஒரு சில கருத்துக்கள் முரண்பாடாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை விட சிறந்த மருத்துவர்கள் நமது நாட்டில் யாரும் கிடையாது. அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஆறுமுகசாமி அறிக்கை முற்றிலும் பொய் என்று நாங்கள் கூறவில்லை. அந்த அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஓபிஎஸ் அணியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.