மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த 4 வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்றம் கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற கிளை விதித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று சவுக்கு சங்கருக்கு நிபந்தனை விதித்துள்ளது. இதையடுத்து, சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகள் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது. இந்த 4 வழக்குகளின் கீழ் கடந்த 11ஆம் தேதி சவுக்கு சங்கரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது நிபந்தனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.