அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலைக்கடம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகள் சத்யா (28). இவருக்கும், ஆலவாய் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது. கொளஞ்சி கோவையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே சத்யாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-07-at-4.22.31-PM-1024x576.jpeg)
இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு சத்யா வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் வசித்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி சத்யாவிற்கு அறிவுரை கூறியதுடன், அந்த வாலிபரை எச்சரிக்கை செய்து செந்துறை அண்ணாநகரில் வசிக்கும் சத்யாவின் தாய்மாமன் பெரியசாமி மனைவி சாவித்திரியுடன் அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சத்யா மற்றும் அவரது தாயார் தனலட்சுமி ஆகியோர் சாவித்திரி வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்தனர். அப்போது சத்யா செந்துறையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு வந்த சத்யா, வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். அப்போது செல்போனில் கள்ளக்காதலனுடன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர், தங்களது உறவு காரணமாக பிரிந்து சென்ற தனது மனைவியை உறவினர்கள் பேசி சேர்த்து வைத்து விட்டனர். ஆகையால் நீயும் உனது கணவருடன் சேர்ந்து வாழ் என்று அறிவுரை கூறினாராம்.
இதனால் மனமுடைந்த சத்யா அந்த இளைஞரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் சத்யாவின் தாயை செல்போனில் தொடர்பு கொண்டு சத்யா தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவரை அவரது உறவினர்கள் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை வீட்டிற்கு அருகே உள்ள தேக்கு மரத்தோப்பில் சேலையில் தூக்குப்போட்ட நிலையில், சத்யா சடலமாக தொங்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சத்யாவின் உடலைக் கைப்பற்றினர். சத்யாவின் தற்கொலைக்கு கள்ளக்காதலன் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.