நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்துக்கெண்டே செல்கிறது. அந்த வகையில் இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகின.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மேலும் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை சந்திப்பு எதிரில் இன்று காலை சென்னை நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மூன்று இருசக்கர வாகனங்களின் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன் . மேலும், இவ்விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பார்த்தசாரதி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதி அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் அறிவித்தார்.