போலியான கொரோனா மருந்துகளை அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திற்கு சப்ளை செய்தது தொடர்பாக சென்னையைச் சார்ந்த தம்பதியினரை கைது செய்து இருக்கிறது மத்திய புலனாய்வுத்துறை. அமெரிக்காவைச் சார்ந்த டியூசிஎஸ் ப்ளாரிஸ் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்க சென்னை கீழக்கட்டளையில் செயல்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக சென்னையில் இயங்கி வரும் நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 6,29,63,325 தொகையை செலுத்தி இருக்கிறது அமெரிக்க நிறுவனம்.
இதனைப் பெற்றுக் கொண்ட சென்னையைச் சார்ந்த நிறுவனம் போலியான கொரோனா தடுப்பு மருந்துகளை அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இதனைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் டியுசிஎஸ் ப்ளோரீஸ் நிறுவனம் சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த மோசடி சம்பந்தமாக புகார் அளித்தது. பின்னாளில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் தாங்கள் செய்த குற்றங்களை காவல்துறையினரிடம் ஒத்துக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தது.