சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடை காலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில், உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
இந்நிலையில் தான், சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மழை மேகங்கள் லேசாக நகர்ந்து சென்னைக்கு வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் சென்னையில் சில பகுதிகளில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகமாக இல்லாமல் இயல்பாக இருக்கும். நகரின் உள் பகுதிகளில் மட்டும் மழை பெய்யும் என்று சென்னை ரெயின்ஸ் கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும். ஆனால், மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.