கோவை மாவட்டம் பட்டணம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதற்கிடையே, சிறுமியின் சித்தப்பா தாமோதர சாமி, மகளை தான் பார்த்துக் கொள்வதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார். சித்தப்பா உறவு முறை என்பதால், சிறுமியுடன் தங்க உறவினர்கள் அனுமதித்திருக்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் . நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார்.
அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சித்தப்பாவால் கர்ப்பமடைந்து சிறுமி ஆண் குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. பலர் அளித்த ஊக்கத்தின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் அளிக்க, அவரின் சித்தப்பா தாமோதரசாமியின் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா தாமோதர சாமிக்கு போக்சோ வழக்கின் கீழ் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.