ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தினமும் பல விதமான டிஃபன் வகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி திங்கட்கிழமை உப்புமா வகை, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன் கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா வகை, வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு வகைகள் என வழங்கப்படுகின்றன.
இந்த காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க சி.எம்.13எப்.எஸ். என்ற புதிய செயலி அறிமுக படுத்தப்பட்டுள்ளது முதலமைச்சரே இதனை நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த செயலி இருக்கிறது.
இந்த நிலையில், காலை சிற்றுண்டி திட்ட ஆய்வுக் கூடத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு விவரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் ஆர். மணிமேகலையிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார்.
அவர் பேசுகையில், வணக்கம்மா நான் ஸ்டாலின் பேசுறேன் நீங்க மணிமேகலையா, நீங்க எந்த ஏரியா பாக்குறீங்க இன்று பள்ளியில் எத்தனை பேர் சாப்பிட்டாங்க, சரியான நேரத்தில் சாப்பாடு வந்ததா, பசங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா, இடையில் ஏதும் பிரச்சினை ஏதும் இருக்கா என பேசினார்.
அதனை தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் பேசுகையில், ” வணக்கம்மா, நான் ஸ்டாலின் பேசுறேன், உங்க பள்ளியில் இன்று 36 பேர் காலை உணவு சாப்பிட்டிருக்காங்க உணவின் தரம் நன்றாக இருக்கிறதா, நன்றி..என்று தகவல் கேட்டறிந்தார்.