முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலே, இப்போது அரசுக்கு இருக்கக்கூடிய நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப, ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். இங்கே உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.
அதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் ஜூன் மாதம் முதல் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அதேபோல், குடும்ப ஓய்வூதியம் 12,500 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூறினார். மேலும் முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் மருத்துவப் படி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.