தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமருடன் இணக்கம் காட்டியதாகவும், இருதரப்பும் அதிகம் விமர்சிக்காமல் சுமூகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்தில் எல்லாம் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவில் மனோரமா நியூஸ் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழுகின்ற நாடு. இங்கு ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அரசியல் மொழியாகவோ நிச்சயமாக ஆக முடியாது. அப்படி ஆனால் மற்ற மொழிகள் பாதிக்கப்படும். இந்தி ஒருபோதும் திணிக்கப்படாது என ஜவஹர்லால் நேரு உறுதிமொழி அளித்திருக்கிறார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும். திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலையாக இருக்கிறது. இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழ், மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு இருக்கிறது” என்றார்.