சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. அதன்பின் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், அதிபர் மாளிகையையும் துணை ராணுவப் படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால்,ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் பயங்கர மோதல் வெடித்துள்ளது. அதிபர் மாளிகை, ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. மேலும், நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவரும் கொல்லப்பட்டதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சூடானில் உள்ள இந்திய துணை தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சூடானில் துப்பாக்கிச் சூடும், கலவரமும் நடந்து வருதால் அங்கிருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாரும், வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், அடுத்த தகவலுக்கு காத்திருங்கள் என்றும் தெரிவித்துள்ளது.