சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில், காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மதுரைக்கு என தனித்துவமான பாரம்பரியம், பண்பாடுகள் உள்ளது. மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி செய்தார். அரை ஆடை புரட்சி நடைபெற்று 100 ஆண்டுகள் கடந்துள்ளது. அரை ஆடை புரட்சி என்பது உலக புரட்சியாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சாக உள்ளது. எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு உள்ளதாக கூறவில்லை. நாட்டிற்கு தேவையானதை பேசாமல் ஆ.ராசா தேவையற்றவைகளை பேசி வருகிறார். ஆ.ராசாவின் பேச்சால் நாடு கொந்தளித்து உள்ளது. ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. ஆ.ராசாவின் கருத்து ஒட்டுமொத்த திமுகவின் கருத்தாக தான் பார்க்க வேண்டும். எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது. ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள்.

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது. மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது” என குற்றம்சாட்டினார்.