நாங்குநேரி சம்பவம் எதிரொலியாக ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிர்கால சமுதாயம் சாதி, மதம் போன்ற பிற்போக்குச் சிந்தனைகளற்று, சகோதர உணர்வுடன் வாழ வேண்டும். புதிய தமிழ்நாடு படைத்திட எண்ணி கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் திமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சனைகளில் பள்ளி-கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்தவுடன் அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரை குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். மேலும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாதிக்கப்பட்ட மாணவனின் உயர்கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.