வந்தே பாரத் ரயில் பயணித்த பயணிக்கு ஐஆர்சிடிசியால் வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி ஒன்று கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்.1ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராணி கம்லாபதியில் இருந்து ஜபல்பூர் சந்திப்புக்கு வந்தே பாரத் ரயில் சென்ற பயணி ஒருவர், இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். டாக்டர் ஷுபேந்து கேசரி என்ற பயணி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட அசைவ உணவில் இறந்த கரப்பான் பூச்சி இருந்த படத்தையும், ஜபல்பூர் ரயில் நிலையத்தில் அவர் அளித்த புகாரையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டும் சம்பந்தபட்ட சேவை வழங்கினருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் இல்லாமல், இனி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தனது எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்திலும் ஐஆர்சிடிசி வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக எழுந்த புகாரில், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஆர்சிடிசி குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.