சிவகங்கை அருகே கல்லூரி வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 மாணவிகள் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தனியார் பிஎட் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இருந்து மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 20 பேர் கல்லூரி பேருந்தில் கீழடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் மேப் பார்க்க பின்னாள் திரும்பி செல்போனை வாங்கியபோது, எதிர்பாராத விதமாக பேருந்து சாலையோர மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத நிலையில், பேருந்தில் பயணித்த மாணவிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவிகளிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில், கல்லூரி மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.