இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் நாள் (1, மே), சுதந்திர தின நாள், (15, ஆகஸ்ட்) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்த காரணத்தால் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறைந்ததால், கடந்த ஆண்டு சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டத்தை கூட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, தற்போது தொழிலாளர் தினத்தையொட்டி மே 1 ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில், தொழிலாளர் தினமான, மே, 1ல், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையை பின்பற்றி, மே, 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தை, மத சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது என்றும், கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்தை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கிராமசபைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, காய்ச்சல் விழிப்புணர்வு, குடிநீர் சேமித்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.