பிரபல பாலிவுட் இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 65.
பாலிவுட்டில் அஹிஸ்தா அஹிஸ்தா, புலந்தி, தோடி சி பேவபாய், சூர்யா போன்ற பல படங்களை இயக்கியவர் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப். இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். மறைந்த இயக்குநருக்கு நடிகர்கள் கோவிந்தா, பத்மினி கோலாபுரே மற்றும் அசோக் பண்டிட் உள்ளிட்ட பல நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இஸ்மாயில் கடைசியாக 2004ஆம் ஆண்டு வெளியான தோடா தும் பட்லோ, தோடா ஹம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு சில படங்களில் நடிகராகவும் தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். பாலிவுட்டின் பிரபல நடிகர் கோவிந்தாவை அறிமுகப்படுத்தியது இவர்தான். கோவிந்தாவின் முதல் படமான லவ் 86 ஐ இஸ்மாயீல்தான் இயக்கியிருந்தார். இஸ்மாயீலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய நடிகர் கோவிந்தா “நான் மிகவும் சோகமாக இருக்கிறேன். என்னுடைய கேரியர் அவருடைய படத்தில் இருந்து தொடங்கியது. கடவுள் அவருடைய ஆன்மாவை சொர்க்கத்தில் வைக்கட்டும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவர் எனக்கு வேலை கொடுத்தது மட்டுமல்ல, என் மீது நம்பிக்கை வைத்திருந்தார். கோவிந்தாவுக்கு சினிமா புரியும் என்று என் வாழ்வில் முதலில் சொன்னவர் அவர்தான். கோவிந்தில் இருந்து என்னை கோவிந்தா ஆக்கியதில் அவருக்குப் பெரிய பங்கு உண்டு” என அவரை நினைவுக்கூர்ந்தார்.
அதே போல நடிகை பத்மினி கோலாபுரே ”நான் அவருடன் தோடி சி பெவாஃபை மற்றும் அஹிஸ்தா அஹிஸ்தா உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர் தனது நடத்தையில் கண்டிப்பானவராகத் தெரிந்தார். ஆனால் அவர் சிரித்த முகத்துடன் இருந்தார். அவர் எதைப் பற்றி மிகவும் உறுதியாக இருப்பார். எப்போது சிரித்த முகத்துடன் இருக்கும் சென்ஸிட்டிவான இயக்குநர். இவரது மரணம் மிகப்பெரிய இழப்பு“ என்றார்.