கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன..
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் லாக்டவுன் அமலில் இருந்தது.. நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் அத்தியாவசிய வேலைகள் இருந்தால் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டது.. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.. இந்த லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை அதிகரித்ததாக சமீபத்திய மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன..
சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் (HMIS) அறிக்கையின்படி, 2021-22 ஆம் ஆண்டில் ஆணுறை விற்பனை 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது, கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு இரட்டிப்பாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகளவில் ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.. அதைத்தொடர்ந்து ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம், ஆணுறை விநியோகத்தில் முன்னணி மாநிலங்களாக உள்ளன.. அதைத் தொடர்ந்து குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் ஆகியவை உள்ளன.
2020-21ல் 31.45 கோடி யூனிட் ஆணுறைகள் விற்பனையான நிலையில், 2021-22ல் 33.70 கோடி யூனிட் ஆணுறைகள் விற்கப்பட்டன. இதே போல் கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு, அனைத்து மாநிலங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது.. மேலும், ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை (COC) மாத்திரைகளின் விற்பனை 8.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020-21ல் 57.1 லட்சமாக இருந்த கருத்தடை மாத்திரைகளின் விநியோகம், 2021-22ல் 76.5 லட்சமாக அதிகரித்தது. கருத்தடை மாத்திரை விற்பனையிலும், உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கருத்தடை மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது..