ஈரோடு மாவட்டம் மைல்கேல்பாளையம் ஆலமரத்தூர் ஓடைமேடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண், ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ”நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். நான் வேலைக்கு செல்லும்போது மூலக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதங்களாக நான் கள்ளிப்பட்டி வளையபாளையம் காலனியில் உள்ள எனது அம்மா வீட்டில் தங்கியிருந்தேன்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு அந்த நபர் என்னை தொடர்பு கொண்டு, கள்ளிப்பட்டிக்கு வருமாறு அழைத்தார். நான் அங்கு சென்ற நிலையில், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு கூறினார். நானும் அவருடன் சென்றேன். கோபி அருகே சென்றபோது எங்கு அழைத்து செல்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு என்னை சாதி பெயரை சொல்லி மிரட்டி ஈரோடு அருகே உள்ள பண்ணை வீட்டில் அடைத்தார்.
அங்கு மதுபோதையில் அவருக்கு தெரிந்த 3 பேர் வந்திருந்தனர். அப்போது, எங்களுடன் அனுசரித்துப் போகவில்லை என்றால் என் கணவரையும், மகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின்னர், என்னை 2ஆம் தேதி இரவு முதல் 4ஆம் தேதி வரை 3 நாட்கள் அடைத்து வைத்து 4 பேரும் கூட்டுப் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து என் அம்மாவிடமும், என் கணவரிடம் கூறினேன். எனவே, என்னைக் கடத்தி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்.பி.யும் உத்தரவிட்டுள்ளார்.