தமிழ்நாட்டிற்கான நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடகா ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்ளை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் வரும் 30ஆம் தேதி காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
எனவே, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு களப்பணியாற்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த மாபெரும் போராட்டத்தினை பேரெழுச்சியாக முன்னெடுக்க வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.