5 ஆண்டுகள் ஆணும் பெண்ணும் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவில் இருந்ததை பலாத்காரம் என கருதமுடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த இளைஞர், 5 ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய போது சாதி வேறுபாடு காரணமாக அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்து அந்த பெண்ணுடன் பல முறை அந்த இளைஞர் உடலுறவு கொண்டதாகவும், இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த நபரை அந்த பெண் பல முறை கேட்டும் அவர் முடியாது என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, 5 வருடமாக அவருடன் உடலுறவு கொண்ட பிறகு, அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ஒரு முறை, இரண்டு அல்லது மூன்று முறை அல்ல; நாட்கள் அல்லது மாதங்கள் அல்ல; ஆனால் பல ஆண்டுகளாக இருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதாவது ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக உடலுறவு கொண்டதாகச் சொல்ல முடியாது என்று கூறினார். மேலும், சட்டப்பிரிவுகள் 375 மற்றும் 376 ஆகியவற்றின் கீழ் மனுதாரர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என்று கூறிய நீதிபதி, இருவருக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனைகள் மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் 406-வது பிரிவின் கீழ் நம்பிக்கை துரோகம் செய்த குற்றம் ஆகாது என்றும் தெரிவித்தார். ஆனால் குற்றம்சாட்டப்படும் நபர் சட்டப் பிரிவு 323 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
சட்டப்பிரிவு 375 இன் படி பெண்ணின் சம்மதம் இல்லாமலும் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவும் உடலுறவு கொள்வதே பாலியல் பலாத்காரம் ஆகும். ஆனால் 376 சட்டம் பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனைகளை விளக்குகிறது. 5 ஆண்டுகால உடலுறவின் போது இருவருக்கும் ஒருமித்த சம்மதம் இருந்ததால் எந்த வகையிலும் இதை பலாத்காரம் என சொல்ல முடியாது என்று நீதிபதி கூறினார். ஆனால் தனது சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியின் அடிப்படையில் நடந்ததால் இது பலாத்காரம் தான் என்று பெண்ணின் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.