மத்தியப்பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தல் புகாரை திரும்பப்பெற மறுத்ததால் பெண்ணின் தாயார் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதுடன், சகோதரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவருக்கு 2019ல் அதே பகுதியை சேர்ந்த விக்ரம்சிங் என்பவர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அடுத்து, புகாரின் பேரில் விக்ரம்சிங் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த விக்ரம்சிங் தலித் பெண் கொடுத்த பாலியல் வழக்கை திரும்பப்பெறும்படி அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வந்துள்ளார்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வழக்கை திரும்பப்பெற மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த விக்ரம்சிங் தனது உறவினர்களுடன் சேர்ந்து தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணும் அவரது தாயாரும் மட்டும் இருந்துள்ளார். அவர்களிடம் வழக்கை திரும்பப்பெறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர், அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து உடைத்துள்ளனர், அப்போது அங்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரையும் வலக்கை திரும்பப்பெறுமாறு கட்டாயப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர், அப்போது அவர்களிடமிருந்து மகனை காப்பாற்ற சென்ற தாயையும் இரக்கமின்றி கொடூரமாக தாக்கி அவரது ஆடைகளை கலைத்து நிர்வாணப்படுத்தி உள்ளனர், பிறகு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே உடனே அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. பின்னர் அடிப்பட்ட பெண்ணின் சகோதரரையும் அவரது தாயையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் படுகாயமடைந்த சகோதரர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் பெண்ணின் தாய்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விக்ரம்சிங் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை, பாலியல் தொல்லை, எஸ்.சி – எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் விக்ரம்சிங் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலித் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமில்லாமல், புகார் கொடுத்ததையும் கண்டித்து, அவரது தாயையும் சரமாரியாக தாக்கி, சகோதரரையும் கொலை செய்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
மேலும் இது போல சம்பவம் தொடர்ந்து அரங்கேறுவதால், ஆளும் பாரதிய ஜனதா அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், மத்திய பிரதேசத்தில் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது ஒடுக்கு முறை தடையின்றி தொடர்கிறது. தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் விகிதத்தில் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது என தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் பூபேந்திரசிங், தகராறு காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், இதனை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.