தமிழகத்தில் பல மாவட்டங்களில் பாஜக அலுவலகம் மற்றும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் தமிழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றார். உயர்மட்ட விசாரணை நடத்தும் அளவு மோசமான சூழல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.