நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நாலாந்துலா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் முதுமொத்தன் மொழி முத்தாரம்மன் கோவில் பூசாரியாக கடந்த ஒன்றரை மாதமாக பூஜை செய்து வந்தார். இந்நிலையில், இந்த கோவிலுக்கு அதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் பாண்டியன் என்பவர் நேர்த்திக்கடனாக 3 தங்க பொட்டு தாலிகளை வழங்கியுள்ளார். மறுநாள் பூஜை முடிந்ததும் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகளை கழற்றித் தருமாறு கோவில் நிர்வாகி காமராஜ் கேட்டுள்ளார். உடனே பூசாரி மகேஷ் தங்க நகைகளை கழற்றி நிர்வாகி காமராஜிடம் கொடுத்துள்ளார். அப்போது நகையை பார்த்ததும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே நிர்வாகி காமராஜ், பூசாரி மகேஷை அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று பூஜை செய்ய சொல்லிவிட்டு அவர் கொடுத்த நகைகளை திசையன்விளை நகை கடைகளில் சென்று சோதனை செய்துள்ளார்.
சோதனையில் அந்த நகைகள் அச்சு அசல் தங்க நகைகளை போல வெள்ளியில் செய்து கவரிங் முலாம் பூசப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது பூசாரி மகேஷ் தலைமறைவாகி உள்ளார். இது குறித்து கோவில் நிர்வாகி காமராஜ் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் கோவில் பூசாரி மகேஷ் தங்க நகைகளை திருடிவிட்டு, போலி நகைகளை சுவாமிக்கு அணிவித்தது தெரிய வந்தது. இதனைடுத்து, போலீசார் அவரை தேடி வந்தனர். அப்போது நாகர்கோவிலுக்கு தப்பித்துச் செல்ல முயற்சித்த அவரை நாலந்துலா கிராமத்தில் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்த எட்டேகால் ( 8 1/4 ) சவரன் தங்க நகைகளை மீட்டனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மகேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பூசாரி மகேஷ் பல்வேறு கோவில்களில் பணிபுரிந்து வந்த நிலையில் அக்கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்குள்ள நகைகளை ஆய்வு செய்ததில் இதே போன்று நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் பூசாரி மகேஷ் மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளாரா? அல்லது இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா..? என விசாரணை செய்து வருகின்றனர். அதே போல கோவிலில் உள்ள அசல் தங்க நகைகளை போலவே இவருக்கு போலியாக நகை செய்து தருவது யார்? எனவும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.