கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், மாமல்லபுரத்திற்கு அருகே சனிக்கிழமை அதிகாலை கரையை கடந்த நிலையில், அந்த புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இந்த 3 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் இன்று பிற்பகல் 3 மணிக்கு வகுப்புகளை முடித்து கொள்ளுமாறு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.