பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உள்ளூர் விமான விலை கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதுவும் இந்த வார இறுதியுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை தொடங்குவதால் சென்னையில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பலரும் வெள்ளிக்கிழமை முதல் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்தாண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், விமான கட்டணங்கள் 3 முதல் 5 மடங்கு வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், பொதுவாக திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரூ.6,000 தொடங்கி ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,000 வரை கட்டணம் இருக்கும். ஆனால், தற்போது ரூ.6,700 தொடங்கி ரூ.17,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதே போல் சென்னையில் இருந்து கோவை செல்வதற்கான விமான கட்டணம் ரூ.3,000இல் இருந்து ரூ.14,000ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து சேலம் செல்ல ரூ.2,200ஆக கட்டணம் தற்போது ரூ.11,000ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.