கடந்த 2 நாட்களில் மொத்தமாக 3,12,345 பயணிகள் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்
காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. விடுமுறை தொடங்கிவிட்டதால், நேற்று முன்தினம் மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் மொத்தமாக 5,679 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மொத்தமாக 3,12,345 பயணிகள் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், பண்டிகை காலம் முடிந்து வெளியூரில் இருந்து சென்னைக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.