ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியான மணீஷ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், இம்முறை பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் விலகிக் கொண்டன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. இதனால் திமுக, நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், தேவையற்ற செலவை குறைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், சமீப காலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக அதிமுகவும், பாஜகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இத்தகைய சூழலில் இவர்களும் தேர்தலில் போட்டியிருந்தால், ஆளுங்கட்சியின் குறைகளை மக்கள் மன்றத்தில் சுட்டிக் காட்ட வாய்ப்பாக இருக்கும். ஆனால், அந்த விஷயத்தில் அதிமுக, பாஜக கோட்டை விட்டு விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். எனவே, இந்த தேர்தலை பொறுத்தவரை திமுக உடன் நேரடியாக மோதுவதால் அதிமுக, பாஜகவை தாண்டி பிரதான எதிர்க்கட்சி நாம் தமிழர் என்ற பிம்பம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியான மணீஷ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஶ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஶ்ரீகாந்த், சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்தில் இணை தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணின் வேட்புமனு ஏற்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.