சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்பதை தாண்டி, தன்னுடைய தாத்தா மற்றும் அப்பா பாணியில் அரசியலில் திடீரென குதித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி வெற்றி வாகை சூடியதை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக அதிரடியாக அறிவித்தார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘மாமன்னன்’ திரைப்படம் தான், தன்னுடையை கடைசி திரைப்படம் என கூறியுள்ளார்.
இந்நிலையில் ‘கண்ணை நம்பாதே’ பட ப்ரோமோஷன்காக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உதயநிதியிடம், அவருடைய மகன் இன்பநிதி பெண் தோழியோடு நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த உதயநிதி, ”தன்னுடைய மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவருடைய பர்சனல். எனக்கும், என்னுடைய மனைவிக்கும், மகனுக்குமான விஷயம். எனவே இதைப்பற்றி வெளியே சொல்ல விரும்பவில்லை. இது அவருடைய பர்சனல், இதற்குள் நானே ஒரு லிமிட்டை தாண்டி தலையிட முடியாது” என்று முதல்முறையாக மகனின் சர்ச்சை குறித்து பதிலடி கொடுத்துள்ளார்.