விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன் பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீருக்காகவும் சமையல் செய்வதற்காகவும் சிண்டெக்ஸ் டேங்க் ஒன்று உள்ளது. பள்ளி அருகே உள்ள இந்த சிண்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று அரசு விடுமுறை என்பதால் பள்ளிக்கு யாரும் வரவில்லை. இந்நிலையில், இன்று காலையில் மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி செய்வற்கான ஏற்பாடுகளை செய்ய சமையல் செய்யும் வேலையில் ஈடுபடும் பெண்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிண்டெக்ஸ் தொட்டியை திறந்து தண்ணீர் பிடித்தனர். அப்போது, தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள், உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்த போது மாட்டுச்சாணம் இருந்துள்ளது. உடனடியாக சமையல் செய்யும் பெண்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்னர், உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, சமையலுக்கு பயன்படுத்தபடும் நீரில் மாட்டுச்சாணம் கலந்தது யார் என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் சமையலுக்கு பயன்படுத்தப்படும் நீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.