ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்காக 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ள நிலையில், நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில், இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து, உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிசிசிஐ, உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.
அதன்படி, இந்தியாவில் அக்டோபா் 5ஆம் தேதி போட்டி தொடங்கி நவம்பா் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக்.5ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.
இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக இருக்கின்றன. ரசிகா்கள், அதிகாரப்பூர்வ இணையத்தில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.