ஒடிசாவில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த கிரிக்கெட் வீராங்கனை வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் (26) கடந்த 11ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர், கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ராஜஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில், குருதிஜாதியா வனப்பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்ரீ தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது ஸ்கூட்டர் வாகனமும் வனப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்ரீயின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்ததால், இது கொலையாக இருக்கக் கூடும் என அவரது பெற்றோர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்ரீ, பஜ்ரகபட்டி சென்றிருந்தார். மொத்தம் 25 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த முகாமில் இருந்து புதுச்சேரி செல்லும் அணியின் இறுதிப்பட்டியலில் ராஜஸ்ரீ இடம்பெறவில்லை. இறுதிப்பட்டியல் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மறுநாள் வீராங்கனைகள் பயிற்சிக்கு செல்ல ராஜஸ்ரீ தனது தந்தையை பார்க்க பூரிக்குச் செல்வதாக சொன்னவர் அதன்பின் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காணாமல் போயுள்ளார். அதேசமயம், மாநில அணியில் அவர் பெயர் இல்லை என்றதும் ராஜஸ்ரீ அழுதுள்ளார். இதனை சக வீராங்கனைகள் கண்டுள்ளனர். இதையடுத்து, ஊருக்குச் செல்லவில்லை என்பதை அறிந்த பயிற்சியாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.