சேலம் மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பிரபு என்பவர் மீது 3 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கரூர் மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் உள்ளார். இதற்கிடையே, சேலம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் பிரபு விசாரணை கைதியாகவும் உள்ளார்.
இந்நிலையில், வீராணம் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சேலம் மத்திய சிறை காவல்துறையினர் பிரபுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் பிரபு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இதே வீராணம் கொலை வழக்கில் விசாரணை கைதிகளாக உள்ள அய்யனார், அய்யந்துரை ஆகிய இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பொறுப்பு சிறை காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் பொய்யான காரணங்களை கூறி, நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டினர்.
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் 7-வது பிளாக்கில் சாராய ஊறல் பிடிபட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், சாராய ஊறலை நீங்கள் தான் போட்டீர்கள் என்று கூறி, சிறை கண்காணிப்பாளர் வினோத் குமார் கொடுமைப்படுத்தியாகவும் அவர்கள் கூறினர். மேலும் அதிகாரிகள் துணையுடன் சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன் புழக்கம் இருப்பதாகவும், சிறையில் இருந்தபடியே கொலை குற்றவாளிகள் கொலையை நிகழ்த்துவதாகவும், குறிப்பாக சிறை காவலர்கள் தான் செல்போனை எடுத்து வந்து கொடுப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை கைதி பிரபு முன்வைத்தார்.
மேலும், இந்த உண்மைகளை வெளியே சொன்னதால் என்னை சிறையில் வைத்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு சிறைத்துறை அதிகாரிகளே என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். சிறை கண்காணிப்பாளர் வினோத் குமார் சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து வருகிறார். இது தொடர்பாக செய்திகள் நீதிமன்றத்தில் கூறுவேன் என்று சொன்னாலும் நீ எங்க பொய் சொன்னாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறி வருவதாக கைதி பிரபு கூறினார். இது தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.