சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் ; பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் 2022 – 2023 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது.

தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி நடைபெற்று வரும் வேளையில் வடகிழக்கு பருவ மழை மூலம் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது எனவும் இதனால் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை உடனடியாக காப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் நெல் (சம்பா), தட்டைப்பயறு, சோளம், நிலக்கடலை பயிர்கள் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது.

விவசாயிகள் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீமியத் தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.