சிஆர்பிஎஃப் வீரர்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையாக சிஆர்பிஎஃப் (The Central Reserve Police Force – CRPF ) விளங்குகிறது.. இதில் சுமார் 3.25 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், போராட்டங்களை தணிப்பதற்கும் காவல்துறை நடவடிக்கைகளில் மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.. இதுதவிர, இந்தியாவின் பொது தேர்தல்களிலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்..
இந்த நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து புதிய சமூக ஊடக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎஃப்-ன் அனைத்து அமைப்புகளுக்கும் இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ” சிஆர்பிஎஃப் வீரர்கள் சமூக வலைதள பக்கங்களில் அரசாங்கத்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது.. அரசாங்கக் கொள்கைகள் குறித்து எதிர்மறையான கருத்துகளை வெளியிடக் கூடாது.. எந்தவொரு பொது மன்றத்திலும் அரசியல் / மத அறிக்கைகளை வெளியிட வேண்டாம்.. சர்ச்சைக்குரிய அல்லது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிலை பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம்..
சிஆர்பிஃப் பணியாளர்கள் சமூக வலைதள பக்கங்களில் கோபம், வெறுப்பு அல்லது குடிபோதையில் எதையும் எழுதவோ அல்லது பதிவிடவோ கூடாது.. ஆன்லைனில் யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்கவோ அல்லது பாரபட்சமாக கருத்து தெரிவிக்கவோ கூடாது.. அங்கீகரிக்கப்படாத தளத்தின் மூலம் எதையும் பகிர வேண்டாம். பதவி உயர்வுகள், உள்ளூர் உத்தரவு, ஆட்கள் பற்றாக்குறை போன்றவை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது… இது எதிரிகளுக்கு உளவுத்துறை தகவல்களை சேகரிப்பதற்கு வாய்ப்பளிக்கும்.
சிஆர்பிஎஃப் பணியாளர்கள் உண்மைக்கும் கருத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை (சமூக ஊடக தளங்களில்) என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.. வலைப்பதிவுகள், அல்லது வேறு எந்த தளத்திலும் அல்லது பயனர்களின் எந்த வடிவத்திலும் நீங்கள் வெளியிடும் கருத்துகளுக்கு தனிப்பட்ட முறையில் அவரவரே பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள், பாலினப் பிரச்சினைகள் மற்றும் ஆன்லைனில் சர்ச்சைக்குரிய சிக்கல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது மிகுந்த விவேகத்துடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் புதிய நண்பர்களை உருவாக்குதல், இணைத்தல், பின்தொடர்தல் அல்லது அறியப்படாத நபர்களிடமிருந்து கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்..
அதிகாரப்பூர்வ விஷயங்கள் அல்லது குறைகளை விவாதிக்க சமூக வலைதளங்கள் பொருத்தமான தளம் அல்ல. தேவைப்பட்டால், படை வீரர்கள் தங்கள் குறைகளை நிறுவன தளங்களில் தெரிவிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..