சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அவதார ராமசாமி தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரது மனைவி கௌசல்யா (32). இவர், கர்ப்பமாக இருந்ததால், பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையே, கெளசல்யாவின் அண்ணன் விஜய சிம்மன். அவரது மனைவி துர்காபாய். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் தேதி கௌசல்யா வீட்டிற்கு 2 பேருடன் சென்ற துர்காபாய் அவரிடம், “எங்கள் விவாகரத்து பிரச்சனைக்கு காரணம் நீ தான்” என்று கூறி அவரை அடித்து, கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். இதனால், கௌசல்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கௌசல்யாவை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின்னர், ஜனவரி 23ஆம் தேதி திடீரென கெளசல்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை சில மணி நேரத்திலேயே இறந்து விட்டது. சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய கௌசல்யா, தனது குழந்தையின் நினைவாகவே இருந்து வந்த நிலையில், அண்ணி, தனது வயிற்றில் எட்டி உதைத்தது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில், துர்காபாய் மீது புகார் அளித்தார். கெளசல்யாவின் புகரைப் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தியதில், துர்காபாய், கெளசல்யாவின் வயிற்றில் எட்டி உதைத்தது உண்மை தான் என விசாரணையில் தெரிந்து கொண்ட பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து துர்காபாயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான பப்லு, குஷிதா பானு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.