தெலங்கானா மாநிலம் திருப்பதியில் கரீம் நகரில் ஹோட்டல் ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முன்னிட்டு மதியம் 2.30 மணிக்கு மேல் 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. பிரியாணி வாங்க வருபவர்கள் கண்டிப்பாக ஒரு ரூபாய் நோட்டு கொண்டு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 1 ரூபாய் நோட்டு கொண்டு வந்தால் மட்டுமே பிரியாணி, ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டும் தான் என்ற நிபந்தனையையும் ஹோட்டல் நிர்வாகம் விதித்தது. ஆனாலும், கூட்டம் குவிந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த மக்கள் பிரியாணியை வாங்கி சாப்பிட ஆசைப்பட்டு, 1 ரூபாய் நோட்டுடன் ஹோட்டல் முன்பு உள்ள சாலையில் திரண்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் ஹோட்டல் முன்பு காத்திருந்தனர். பிரியாணி வாங்க வந்தவர்கள் அப்பகுதியின் முக்கிய சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு பிரியாணி வாங்க அடித்துப் பிடித்து ஓடி வந்தனர். ஹோட்டலுக்குள் நுழைய பெரும் தள்ளுமுள்ளே நடந்தது. நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, ஹோட்டல் உரிமையாளர் போலீஸை நாடினார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போனது. இதையடுத்து, ஹோட்டலையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.
1 ரூபாய் பிரியாணியை வாங்க வந்தவர்களின் வாகனங்கள் சாலையில் நின்றதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், போலீசார் பிரியாணி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த பொதுமக்கள் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தியிருப்பதை பார்த்து அவற்றிற்கு ரூ. 200 முதல் 250 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதனால் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என்று வந்தவர்கள் ரூபாய் 250 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹோட்டலும் மூடப்பட்டதால், பலரும் பிரியாணி கிடைக்காமல், அபராதம் கட்டிய ஏமாற்றத்தோடு திரும்பினர்.