தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு பைப்போர்ஜாய் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில் 4 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பைப்போர்ஜாய் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், கோவாவுக்கு மேற்கே-தென்மேற்கே 920 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 1,050 கி.மீ தொலைவிலும், போர்பந்தரிலிருந்து தென்-தென்மேற்கே 1,130 கி.மீ தொலைவிலும் போர்பந்தருக்கு தெற்கில் 1,430 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பைப்போர்ஜாய் புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக தீவிரமடைந்து கிழக்கு மத்திய அரபிக்கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.