டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் கார் விபத்தில் இறந்தது தொடர்பான வழக்கில் பெண் மருத்துவர் மீது வழக்குப் பாய்ந்ததுள்ளது.
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார். இதில் பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சைரஸ், அவரது நண்பர் ஜகாங்கீர் பலியானார்கள். இது தொடரபாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஒரு பக்கம் பி.எம்.டபள்யு கார் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தொழில்நுட்பங்கள் சரியாக உள்ளதா என ஆராயப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதே காரில் பயணித்த பெண் டாக்டர் அனஹிதா (55). இவர்தான் காரை ஓட்டியவரும் கூட. இவரது கணவரும் அருகில் இருந்தார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் அவரது கணவர் டேரியல் பந்தோலே வெளியில் வந்துள்ளார். அவரிடம் போலீஸ் விசாரித்தனர். ஒன்றரை மணி நேரம் கேள்விகள் கேட்கப்பட்டதில் அவர் மனைவி அனஹிதா மீதும் தவறு இருப்பது வெளியானது. காரை வேகமாக ஓட்டியதன் காரணமாகவே விபத்து நடந்துள்ளது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயங்களுடன் அனஹிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணையத்திலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெல்ல மெல்ல அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இன்னும் ஐ.சி.யு. ல் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து ஏற்பட்டபோது மிஸ்திரி ஜஹாங்கீர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அனஹிதாவும் அவரது கணவரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
ஏற்கனவே காரை தயாரித்த நிறுவனத்தின் அதிகாரிகள் அறிக்கை அளித்திருந்தனர்.அதில், ஓட்டுனர் முன்னாள் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சி எடுத்தபோது ஏற்கனவே அந்த 2வது பாதையில் மற்றொரு வாகனம் சென்று கொண்டிருந்துள்ளது. தவறாக கணித்து வேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் விபத்திற்கு 5 நொடிகளுக்கு முன்பு பிரேக் அப்ளை செய்யப்பட்டுள்ளது. அப்போது 89 கிலோ மீட்டர் வேகத்திற்கு கார் வேகம் குறைந்துள்ளது. சாலையில் அதிகபட்ச வேகமே 80 கி.மீ. வேகம் என இருக்கும் போது விதியை மீறி அதிவேகத்தில் சென்றதும் தெரியவந்துள்ளது.