இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், நேற்று குறைந்தது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இதற்கிடையே, மே மாதம் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும் இன்னும் 10 நாட்களில் இந்த உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் இந்தியாவில் 9,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 8000க்கு கீழே குறைந்தது. நேற்று இந்தியாவில் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10,000 தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.4 சதவிதமாக அதிகரித்துள்ளது.